பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் பிரிட்டனின் முடிவை உறுதியாக எதிர்ப்பதாகவும், வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீனா கூறியதுடன், அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
நாட்டில் எஃகு உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, சீன எஃகு நிறுவனமான ‘ஜிங்யே’ (Jingye) வசம் இருந்த நஷ்டத்தில் இயங்கும் ‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனத்தை பிரிட்டன் அரசு வியாழக்கிழமையன்று (16) முழுமையாகத் தன்வசப்படுத்தி, அதனைத் தேசியமயமாக்கியது.
இந்த நிலையில் பிரிட்டனின் இந்த நடவடிக்கை ‘ஜிங்யே’ (Jingye) நிறுவனத்தின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாகப் பாதித்ததாகவும், பிரிட்டனில் முதலீடு செய்வதில் சீன நிறுவனங்களுக்கு இருந்த நம்பிக்கையை கடுமையாகச் சிதைத்துள்ளதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் இன்று (17) ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், இந்த விடயங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, சீன நிறுவனங்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஆதரவளிப்பதாகவும், சீனா-இங்கிலாந்து முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுமாறு பிரிட்டனை வலியுறுத்துவதாகவும் சீன வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், சீன நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் என்னென்ன அடங்கும் என்பது தொடர்பில் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.











