இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் ((WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) சாரணர் குழுவின் தலைவர் கலாநிதி எம். சின் பின் பிடின் உள்ளிட்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பிராந்திய சாரணர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இப்பிரதிநிதிகள் குழுவுடன், இலங்கையின் சாரணர் இயக்கத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் அதனை கிராமிய மட்டம் வரை மேலும் விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கஇ வெளிநாட்டு அனுபவங்கள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு சாரணர் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஆசிய-பசுபிக் பிராந்திய பிரதிநிதிகள் குழு இங்கு உறுதியளித்தது.
மேலும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆசிய-பசுபிக் சாரணர் ஜம்போரியை இலங்கையில் நடத்துவது குறித்தும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












