2006-ஆம் ஆண்டின் 06-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் 11 நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்திற்கும் இவ்வருடத்தின் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டமீறல்களைக் கவனத்திற் கொண்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணச்சலவையைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பாக, இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிர்வாக அபராதங்களாகச் சேகரிக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.












