முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிடமிருந்து 20,000 மெட்ரிக் தொன் தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வேறொரு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதால், விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்து அறிக்கையிடுவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், வழக்கினை டிசம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.














