இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (23) வெறும் மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொட மற்றும் வத்தளைப் பகுதிகளில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரரின் 3 வயது மகளின் பிறந்தநாள் விழா அங்கு நடைபெற்றுள்ளது.
‘குடு ரொஷான்’ என்பவரைக் கொலை செய்யும் இலக்குடனேயே துப்பாக்கிதாரி மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார்.
விழாவுக்கு வந்த விருந்தினரைப் போல நடனமாடிக்கொண்டே சென்ற துப்பாக்கிதாரி, ‘குடு ரொஷான்’ அணிந்திருந்த ஆடைக்கு நிகரான ஆடையை அணிந்திருந்த வேறொரு நபரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடந்த வேளையில் ‘குடு ரொஷான்’ புகைப்பிடிப்பதற்காக மண்டபத்திற்கு வெளியே சென்றிருந்ததால், ஆடை அடையாளத்தை வைத்து ஆள்மாறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த ‘வனாத்தே சுமேதா’ என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இக்கொலைச் சம்பவத்தை ‘மட்டக்குளி மனோஜ்’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளுக்கு உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நால்வரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க மற்றும் களனி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் வழிகாட்டலில் 5 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, தெமட்டகொட, குப்பியாவத்தை பகுதியில் நேற்று மாலை 6.35 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இலக்கு வைக்கப்பட்ட நபரைத் துரத்தித் துரத்திச் சுடும் அதிர்ச்சி காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன.
இத்தாக்குதலில் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த வனாத்தமுல்லையைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொலிஸ் காவலில் உள்ள ‘வனாத்தே துமிந்த’ என்பவரின் நெருங்கிய சகா என்பதுடன், கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குத் துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் பிணையில் வெளிவந்தவர் ஆவார்.
இத்தாக்குதலை ‘வனாத்தே சது’ என்பவரின் தரப்பு வழிநடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாடுமுழுவதும் நிலவும் இந்த வன்முறைச் சூழலுக்கு மத்தியில், தேவேந்திரமுனை தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா (ஊர்வலம்) பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.
அதன் பாதுகாப்பிற்காக 600 பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.













