மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 19 பேரும் உடனடியாக மீட்கப்பட்டுத் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் தீவிரமான நிலையில் இருந்த நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.













