சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை கொம்பனித்தெரு பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, நேற்று (25) மாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டபொழுது சந்தேகநபரிடமிருந்து 36,200 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் அவரிடமிருந்த கெப் ரக வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய மலேசியப் பிரஜை எனத் தெரியவந்துள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














