அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ‘குடு அசங்க’ எனப்படும் போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதானார்.
அப்பகுதியின் ஏற்கனவே பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ‘குடு அசங்க’ ரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்கிரமாராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் மேற்பார்வையில் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முதித பிரியங்கரவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்களான மக்பூல், திஸ்ஸநாயக்க , சுதேஷ், சுனில், அஜித் மற்றும் ரணசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













