கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான கணிசமான மழைவீழ்ச்சியால் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் மழையால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.
மகாவலி ஆற்றின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாவலப்பிட்டி, நானுஓயா மற்றும் வட்டவளை உள்ளிட்ட இடங்களில் 200 மில்லி மீற்றருக்கு அண்மையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனால் நாவலப்பிட்டி முதல் பேராதனை வரையிலான மகாவலி ஆற்றங்கரையோர மக்களை வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், திடீர் வெள்ள நிலைமை உருவாகவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தற்போது நிலவும் சூழ்நிலை டித்வா சூறாவளி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் அளவை எட்டாது எனவும் குறிப்பிட்டனர்.
களனி ஆற்றின் மேற்பகுதிகளான லக்சபான, நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனால் கித்துல்கலை உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் தற்போது ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.
எனினும் ஹன்வெல்ல மற்றும் அவிசாவளை இடைப்பட்ட தாழ்நிலப் பகுதிகளிலும், அவிசாவளை, கித்துல்கலை மற்றும் நோர்வூட் பகுதிகளிலும் வெள்ள அபாயம் நீடிப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மேற்பகுதியில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை அண்மித்துள்ளது.
குறிப்பிடத்தக்க உயர்வு இதுவரை இல்லாவிட்டாலும் தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில்வளா மற்றும் கின் ஆறுகள் உள்ளிட்ட ஈர வலய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், அவை தற்போது வெள்ள மட்டத்தை எட்டும் நிலை இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், மகா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்தளவு மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதால், அந்தப் பகுதிகளில் தற்போது வெள்ள அபாயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.













