சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி பாடசாலைக்கு அருகிலுள்ள உட்புற வீதிகளில், ஜூலை 31 அன்று தலைக்கவசம் அணியாமலும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தினம் மாலை மேலதிக வகுப்புகளுக்காக சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அக்காணொளியைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை அடையாளம் கண்ட பொலிஸார், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மோட்டார் சைக்கிள்கள் கடந்த மூன்று நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
19 முதல் 21 வயதுக்குட்பட்ட இச்சந்தேக நபர்கள் அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இன்று (03) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அனைத்து சாரதிகளுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.












