மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க போக்குவரத்து பிரிவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – மட்டக்குளி, கந்தஉட சந்திப் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.
மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை பகுதியில் இருந்து அதிவேகமாகப் பயணித்த சிற்றூந்து ஒன்று, மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் மூன்று உந்துருளிகளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு 15 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















