மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய அமைதியின்மை சம்பவம் திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இது வழக்கமான கைதிகளுக்கிடையிலான மோதல் அல்ல எனவும், சிறை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டார்.
கைதிகள் சிறைச்சாலையின் சமையலறை, உணவகம், மருத்துவப் பிரிவு மற்றும் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திட்டமிட்டு தீ வைத்துள்ளனர்.
இதன் மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகிறது. இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. மஹர சிறை நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் திகதி மூன்று கைதிகள் சிறை கூரையில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டனர். 15 நிமிட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மேலும் சுமார் 1,000 கைதிகள் அவர்களுடன் இணைந்தனர்.
இதையடுத்து நிலைமை பாரிய கலவரமாக மாறியதுடன், கைதிகள் பிரதான நுழைவாயில் மீது கற்களை வீசினர். இதனால் அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் இறப்பர் குண்டுகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்குள் சிறைச்சாலையின் பல பிரிவுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் சிறை அதிகாரிகள் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைதிகளை மீண்டும் அறைகளுக்கு அனுப்பினர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு கைதி உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறை அதிகாரிகள் எவரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மஹர சம்பவத்தை அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட்ட அமைச்சர், நீர்கொழும்பில் கைதிகளுக்கிடையிலான மோதல் இடம்பெற்றதாகவும், ஆனால் மஹரவில் சிறை நிர்வாகத்துடன் நேரடி மோதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
இவ்வளவு அதிகமான கைதிகள் ஒரே நேரத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கு வெளிப்புற தாக்கம் இருந்ததா என்பதையும் விசாரித்து வருகிறோம்.
மஹர சிறையை செயலிழக்கச் செய்வதே நோக்கமாக இருந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருப்பின், அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மஹர சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.














