தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (05) 2026-27 நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இதில், 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தை 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குச் செயல் திட்டம் அடிக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், மக்கள் மீதான தார்மீகக் கடமை உணர்வே முதலமைச்சர் விஜய்யை பொதுவாழ்வில் ஈடுபடத் தூண்டியது என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், அவரது தலைமையைப் பாராட்டினார்.
வெளிப்படையான நிர்வாகம் மற்றும் கொள்கை சார்ந்த அரசியலுக்கான அடித்தளத்தை அமைப்பதில், பல்வேறு அரசியல் சவால்களை முதலமைச்சர் வெற்றிகரமாகக் கையாண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையான சமூக சமத்துவத்தை அடைவதற்கான முயற்சியில், இந்த நிர்வாகம் தனது ஆரம்பகால வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலத்தின் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கு வரவு-செலவுத் திட்டத்தில் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் 3,734 பள்ளிகளை நவீனமயமாக்குவதற்காக அரசு 300 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது.
மேலும், பள்ளிகளின் வளாகத் தூய்மை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ‘சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்’ (Super Clean, Super Campus) என்ற புதிய திட்டம், ரூ. 139 கோடி நிதியுதவியுடன் முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம், கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதையும், அவற்றுக்கு முழுநேரப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு முக்கிய நடவடிக்கையாக, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முறையை மீண்டும் அமலமுபடுத்துமாறு மத்திய அரசை வில்சன் முறைப்படி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 3,734 அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்காக நடப்பாண்டில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
‘சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்’ (Super Clean, Super Campus) திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக ₹139 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கான ஒரு முக்கிய நலத்திட்டமான ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ (Vetri Laptop Scheme) அறிமுகப்படுத்தப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம், கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் திறன்கள் மற்றும் கல்விசார் வளங்களை மேம்படுத்தும் வகையில் மாநில அரசு அவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும்.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறைக்கு 44,527 கோடி ரூபாயும், உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அவையில் தெரிவித்தார்.
கிராமப்புற மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ‘பெருந்தலைவர் காமராஜர் மாதிரிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் நவீன உறைவிடப் பள்ளிகளை அமைக்க அரசு அறிவித்துள்ளது.
125 கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டில் தொடங்கப்படவுள்ள இப்பள்ளிகள், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கல்வி, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை அவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதச் செலவுமின்றி வழங்கும்.
சிறப்புத் தொழில்சார் கல்வியை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, மதுரையில் ஒரு சிறப்புச் சட்டக் கல்லூரியை நிறுவுவதற்கும், தமிழ்நாடு முழுவதும் ₹90 கோடி மதிப்பீட்டில் ஐந்து புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும் நிதியமைச்சர் அறிவித்தார்.
மாநிலத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய நிதியமைச்சர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்புகள் இருமடங்காக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இதனைச் சரிசெய்யும் விதமாக, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அல்லது அரசியல் சார்ந்த அமைப்புகளுக்கு மட்டுமே அரசு ஒப்பந்தங்களை வழங்கும் முந்தைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தற்போதைய அரசு அதிகப் பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு டெண்டர் முறையைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
மதுபான உற்பத்தி நிலையங்கள் மீது ஒரு சிறப்பு வரியை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்பு விரைவுப் படை செயல்பாடு உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முறையான மற்றும் படிப்படியான அணுகுமுறையின் மூலம் நிறைவேற்றப்படும் என்று அவர் அவையில் உறுதியளித்தார்.














