விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடியாக பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியே உலகின் உயர்வருமான நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும், மனித தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய வழிகளை கண்டறிவதே எதிர்கால வெற்றிக்கான முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றமும், 2027 ஆம் ஆண்டுக்கான திட்டமிடல்களும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. பல்வேறு அமைச்சுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைக்கும் வகையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட பிரிவு ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் (NERDC) யானை வேலி அமைத்தல், குறைந்த செலவிலான சுற்றுச்சூழல் நட்பு கட்டிடங்கள், கருவா மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகள் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் ஆராயப்பட்டது. மேலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குதல், பல்கலைக்கழகங்களுடனான ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் புலமைச் சொத்து கொள்கை உருவாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராகும் அறிவியல் வழிக்காட்டி (Road Map), BIMSTEC நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டம், காட்டு யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வெப்ப உணர் கெமரா அமைப்பு, Astro-Tourism உள்ளிட்ட புதிய ஆராய்ச்சி முயற்சிகளும் கலந்துரையாடப்பட்டன.














