எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
கடந்த ஜூன் 8 ஆம் திகதி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருவிட்ட பகுதியைச் சேர்ந்த ‘நிசங்க’ என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் மனைவியுடன் தனக்கு இருந்த சட்டவிரோதத் தொடர்பே இந்தப் படுகொலைக்குக் காரணம் எனச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரியின் சடலம் முதலில் அப்பகுதியிலுள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டு, பின்னர் ஆற்றில வீசப்பட்டதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடங்களைக் காண்பித்துள்ள போதிலும், உடற்பாகங்கள் எதுவும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து முழுமையாக அறிந்திருந்த 25 வயதுடைய பெண் ஒருவரையும் சந்தேகநபர் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்துப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுடனும் சந்தேகநபருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
இக்கொடூரக் கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.













