இந்தியாவில் இன்று (01) முதல் வணிகப் பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அண்மைய இந்த விலை உயர்வானது, இரண்டு மாதங்களாக வர்த்தக எல்பிஜி விலையில் செய்யப்பட்ட குறைப்புகளை மாற்றி அமைப்பதோடு, விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் செலவுகளையும், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் போன்ற வணிகங்களுக்கான இயக்கச் செலவுகளையும் அதிகரிக்கவுள்ளது.
சர்வதேச அளவிலான விலை நிலவரங்களுக்கு ஏற்ப, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை 9.50 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக அதன் விலை 2,738 ரூபாவிலிருந்து 2,747.50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ‘5 கிலோ ஃப்ரீ டிரேட் எல்பிஜி’ (FTL) என்று அழைக்கப்படும் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 2 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக அதன் விலை 762 ரூபாவிலிருந்து 764 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான எரிபொருள் (ATF) விலை லிட்டருக்கு ரூ. 6.28 அல்லது 5.46% உயர்த்தப்பட்டு, ரூ. 115-லிருந்து ரூ. 121.28-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் திகதி லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களின் மொத்தச் செயல்பாட்டுச் செலவில் 40% வரை எரிபொருள் செலவு இடம்பெறுவதால், இந்த விலை உயர்வு அவற்றின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான இரண்டு மாதக் குறைப்புகளுக்குப் பின்னர், அண்மைய வர்த்தக எல்பிஜி விலை உயர்வு வந்துள்ளது.
19 கிலோ சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 1 அன்று 192 ரூபாவும், ஜூலை 1 அன்று 183.50 ரூபாவும் குறைக்கப்பட்டது.
மேற்கு ஆசிய நெருக்கடியின் போது வர்த்தக எல்பிஜி விலைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்தக் குறைப்புகள் வந்துள்ளன.
பெப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,740.50-லிருந்து ரூ.3,113.50-ஆக, அதாவது ரூ.1,373 உயர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















