கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை மீண்டும் நிறைவேற்றத் தொடங்கினால், தெஹ்ரானும் உடனடியாக அதற்கு இணங்கச் செயல்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.
போர் யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல என்றும், வொஷிங்டனுடனான மோதலில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்குத் தான் இன்னும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜூலை மாத இறுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் நேரடித் தாக்குதல்கள் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து — அதாவது அமெரிக்கா லாரக் தீவைத் தாக்கியதும், அதைத் தொடர்ந்து ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதும் நிகழ்ந்த பின்னர் — பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜூன் மாதத்தில் தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தையே அவர் இதன்போது சுட்டிக்காட்டிப் பேசினார்.
அந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அது விரைவிலேயே முறிந்துபோனது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்க வேண்டுமானால், வொஷிங்டன் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று தெஹ்ரான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
















