துபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஆட்டத்தில், கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரம, பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் விறுவிறுப்பான வெற்றியைப் பெற உதவினார்.
இதன் மூலம் நடப்புச் சாம்பியனான இலங்கை அணி 2026 மகளிர் டி20 ஆசியக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறியது.
‘குழு பி’ பிரிவின் இந்தப் போட்டியில் வெற்றிக்குத் தேவையான 115 ஓட்டங்களை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 10 ஆவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது.
அணி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களமிறங்கிய ஐந்தாவது வரிசை துடுப்பாட்ட வீராங்கனையான சமரவிக்ரம (37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்; 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), மந்தமான ஆடுகளத்தில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சிறப்பாக எதிர்கொண்டு நிலைத்து நின்றார்.
28 வயதான இடது கை வீராங்கனை, நிலக்ஷிகா சில்வாவுடன் (18) இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்கள் சேர்த்ததன் மூலம் இலங்கை அணியின் ஆட்டத்தை மீட்டெடுத்தார்.
ஆனால், 17 ஆவது ஓவரில் சில்வா ஆட்டமிழந்தது பங்களாதேஷை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டுவந்தது; அப்போது இலங்கை வெற்றிக்கு 22 பந்துகளில் 33 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
இருப்பினும், சாமரவிக்ரம அந்தச் சவாலைக் கண்டு கலங்காமல், 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கௌஷினி நுத்யங்கனாவின் சிறப்பான ஆதரவுடன் அபாரமான எதிர்த்தாக்குதலை நடத்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி நான்கு பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியை எட்டியது.
ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமரவிக்ரம, ஆட்டத்தை வென்று தந்த தனது சிறப்பான ஆட்டத்தினால் மகிழ்ச்சியடைந்தார்.
முன்னதாக, இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான சமோதி பிரபோத
(4-0-21-3) மற்றும் சுகந்திகா குமாரி (4-1-22-2) ஆகியோர் பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு, பங்களாதேஷ் அணியை 8 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவினர்.
‘பி’ (B) பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள பங்களாதேஷ், அரையிறுதிக்கு முன்னேற, அப்பிரிவின் தங்கள் கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.














