ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிவடையும் என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை நிர்ணய ஆணையகம், யூனியன் பிரதேசத்திலுள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு எல்லை நிர்ணய ஆணையகத்தை அரசாங்கம் அமைத்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யதேவ் பச்சௌரி எழுப்பிய கேள்விக்கு இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளதாவது, “ஓய்வுப்பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எல்லை நிர்ணய ஆணையகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையாளர், தலைமைச் செயலாளர், இந்தியப் பதிவாளர் ஜெனரல், இந்திய சர்வேயர் ஜெனரல், அனைத்து 20 மாவட்டங்களின் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் என பல்வேறு பங்குதாரர்களுடன் ஆணையகம் விரிவான ஆலோசனையை நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்வதே இதன் நோக்கம்.
மேலும் ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 6 முதல் 9, 2021 வரை ஆணையகம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.