ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட சிலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ரஞ்சித் மத்துமபண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் அடுத்த வருடம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட விதிகளின்படி தேர்தல் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இச்செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்படுவதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
எனவே, எதிர்மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பவும், உள்ளுராட்சி தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்து அரசாணை பிறப்பிக்கவும், தேர்தலை நடத்த உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.