வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை (AI) மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் தற்போதைய சுயவிருப்பக் கட்டமைப்பு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறினால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என பிரித்தானியாவின் ஏஐ விவகாரங்களுக்கான அமைச்சர் கனிஷ்க நாராயண் ( Kanishka Narayan ) தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஏஐ நுட்பங்களை மதிப்பீடு செய்வதில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலன்றி, அமெரிக்காவைப் போன்று நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டுப்பாடுகளையே பிரித்தானியா இதுவரை பின்பற்றி வருகின்றது.
இருப்பினும், அண்மையில் முன்னணி ஏஐ நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் இணையப் பாதுகாப்புச் சோதனைகளின் போது தன்னிச்சையாகச் செயற்பட்டு, நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஊடுருவிய சம்பவங்கள் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து, எல்லைப்புற செயற்கை நுண்ணறிவு மாடல்கள் (Frontier AI) மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்று வரும் பின்னணியிலேயே பிரித்தானிய அரசு இந்நிலப்பாட்டை அறிவித்துள்ளது.














