பிலியந்தலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, அரவ்வல, சமகி மாவத்தை, பெலன்வத்த பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய குறித்த இளம் பெண், பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவத்திற்கு அவர் முகம் கொடுத்துள்ளார்.
40 வயதான சந்தேக நபர் ஒருவரினாலேயே இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின், தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறித்த இளம் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணைத் தாக்கிய நபர் நேற்று மாலை தொலைபேசி கோபுரம் ஒன்றில் ஏறியிருந்த போது பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



















