இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த தனது சொந்த அமைப்பினரை ஹமாஸ் சித்திரவதை செய்து தூக்கிலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் ஓரினச்சேர்ககை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் அவரை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து, அவரது மார்பில் மூன்று முறை சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.