மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும் ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு முக்கியமான காரணங்களாக காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். இ. சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு- வாழைச் சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒழுங்கமைப்புக் குழுக் கூடத்தில்
கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மாகாண சபைகள் அதி கூடிய அதிகாரங்களுடன் போதியளவு நிதி வளத்துடன் இயங்குமேயானால் மாகாண சபைகளுக்கு உள்ளே காணப்படுகின்ற சகல நிறுவனங்களும் ஆளணி பற்றாக்குறையற்ற நிர்வாக திறன் உள்ள மக்கள் சேவையுள்ள அலுவலகங்களாக இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் மேலதிக ஆளனிகளும், மேலதிக பண வளமும் வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியினால் மேற்கொள்ளப் படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபையில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான வளங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையே உரியகாரணமாகும் எனவும் தெரிவித்த அவர் இவ்வாறான குறைகளைக் களைந்து கிழக்கு மாகாணம் வினைத்திறன் உள்ள சேவையை வழங்ககூடிய ஓர் அரசநிர்வாக கட்டமைப்புக்கு உட்படுத்த வேண்டுமானால். அதி கூடிய அதிகார பரவலாக்கலும் போதியளவு நிதி ஒதுக்கீடும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து எமக்கு கிடைக்கப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.