பொதுவாக எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் புதுவிதமான, நேர்மறையான மாற்றம் ஏற்றபட்டதை உணர முடியும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடைய வாழ்க்கையில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தும்.
எனினும், சிவன் கோவிலுக்கு செல்வதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன, சிவன் கோவிலுக்கு செல்லும் போது நாம் என்னென்ன விடயங்களை பின்பற்ற வேண்டும் என்ற ஆன்மீக குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
சிவன் கோவிலுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டியவை :
* வீட்டிலிருந்து சிவன் கோவிலுக்கு செல்லும்போது நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு, மனதிற்குள் ஓம் சிவ சிவ ஓம், ஓம் நமசிவாய, சிவாய நம ஓம்!
இப்படி ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே செல்ல வேண்டும். எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்.
* சிவன் கோவிலுக்குள் நுழைந்த உடன் நந்தி தேவரிடம் அனுமதியை வாங்கிக் கொண்டு, சிவனை தரிசனம் செய்ய செல்ல வேண்டும். சிவனை தரிசனம் செய்ய செல்லும் போது குறைந்தபட்சம் கையில் இரண்டு வில்வ இலைகளையாவது எடுத்துச் செல்ல வேண்டும்.
* எப்போதெல்லாம் வில்வ இலையால் மாலை கட்டி சிவபெருமானுக்கு போட முடியுமோ போடலாம். அந்த வில்வ மாலையின் நுனியில் ஒரு மஞ்சள் துணியில் 21 மிளகு அல்லது 11 மிளகு அல்லது 51 மிளகு என்று எத்தனை மிளகுகள் வைக்க முடியுமோ வைத்து முடிச்சு போட்டு சிவபெருமானுக்கு மாலையாக சாத்தி விடுங்கள். சிறிது நேரம் அந்த மாலை சிவன் கழுத்தில் இருக்கட்டும்.
* மூலவரை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். பிரகாரத்தை சுற்றி இருக்கும் மற்ற தெய்வங்களிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும்.
* இறுதியாக சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அரை மணி நேரம் கண்களை மூடி அமர்ந்து தியான நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிவனுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு மந்திரம் அல்லது பதிகத்தை மனதிற்குள்ளோ அல்லது வாய் விட்டோ பாடி தரிசனத்தை நிறைவு செய்யுங்கள்.
* அதன் பின்பு கோவில் குருக்களிடம் சொல்லி, நீங்கள் சாத்திய மிளகு கட்டிய வில்வ மாலையில் உள்ள மிளகு முடிச்சை மட்டும் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மிளகை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து தினமும் ஒரு மிளகு என்ற வீதம் நன்றாக மென்று சாப்பிட்டால் உடலில் இருக்கும் பிணிகள் தீரும். உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகி உடம்பில் புத்துணர்ச்சி பிறக்கும். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
* முடிந்தவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு வேண்டிய வேண்டுதலை நீங்கள் இறைவனிடம் சொன்னாலும் சரி சொல்லவில்லை என்றாலும் சரி இறைவனின் நாமத்தை உச்சரிக்கும் போது உங்களுக்கு வேண்டிய வரங்களை அவனே கொடுத்து விடுவான். இந்த முறையில் சிவனை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.