முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஊழல் மோசடிகள் செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பியங்கர ஜயரத்ன, அமைச்சராக இருந்த காலத்தில் சிலாபத்தில் உள்ள தனது வங்கிக் கணக்கில் 4,94,000 ரூபா பணத்தை வைப்பிலிடுமாறு அதிகாரிகளை வற்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிலாபம் தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு 494,000 ரூபாயை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வருடம் ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.
முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மொத்தம் 3 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
3,000 வெசாக் வாழ்த்து அட்டைகள் அச்சிடப்பட்டமையால் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஏற்பட்ட 128,520 ரூபா நஷ்டம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு 360,000 ரூபா பணம் செலுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.