ஆப்கானிஸ்தான் தனது ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி அறிமுகத்தை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (21) கராச்சியில் நடைபெறும் ஆட்டத்துடன் ஆரம்பிக்கிறது.
ஆப்கானிஸ்தான் தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் என்று நம்புகிறது.
ஆனால் முழு வலிமை கொண்ட தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினமான பணியாக இருக்கும்.
பெப்ரவரி 19 ஆரம்பமான 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 3 ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் ( ‘பி’ பிரிவு) பலப்பரிட்சை நடத்த உள்ளன.
அண்மையில் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்தும் அவ்விரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்க அணி எழுச்சி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது.
தென்னாபிரிக்கா சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்று 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கிண்ணத்தை வசப்படுத்திய அந்த அணி, நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்றால் முதலில் இன்றைய ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டியது முக்கியமாகும்.
பந்துவீச்சில் ககிசோ ரபடா, யான்சென், கேஷவ் மகராஜ் மிரட்டினால் தென்னாப்பிரிக்காவின் கை ஓங்கும்.
சாம்பியன்ஸ் கிண்ணத்தில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கும் ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், மொஹம் நபி, நங்கேயலியா கரோட், நூர் அகமட் ஆகிய சுழற்பந்து வீச்சை தான் அதிகம் சார்ந்து இருக்கிறது.
பேட்டிங்கில் குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இப்ராகிம் ஜட்ரன், குல்படின் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது.
அதே போல் அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதால், இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.