கடந்த 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான தெலம்புயாய வெகந்தாவல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலம்புய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மகன் மறுநாள் உயிரழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.