ரஷ்யா – உக்ரேன் இடையே போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரோனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதோடு, ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
எனினும் குறித்த சந்திப்பின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றது.
ட்ரம்ப்பின் முந்தைய பதவிக்காலத்தில், இருவரும் சந்தித்தபோது, சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆனால், தற்போது வெறும் 13 வினாடிகளுடன் கைகுலுக்கியதுடன், இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்படுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்கு செல்லும் பிற நாட்டுத் தலைவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அதுபோல, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் சமீபத்தில் தனித்தனியாக வெள்ளை மாளிகை பதிவேட்டில் கையெழுத்திடும் நிகழ்வும் நடந்தது. இவர்கள் இருவரும் கையெழுத்திடும்போது, அவர்கள் அமர்வதற்காக நாற்காலியை ட்ரம்ப் சரிசெய்து கொடுத்ததுடன், அவர்கள் பின்னாலேயே ட்ரம்ப் நின்றார்.
ஆனால், செவ்வாய்க்கிழமை மேக்ரானின் சந்திப்பின்போது, மேக்ரானின் முன்சென்ற ட்ரம்ப், இருக்கையில் அமர்ந்து கையெழுத்து போடுமாறு ‘ என்று சைகை காட்டினார். மேக்ரான் அமர்வதற்கான நாற்காலியை சரிசெய்யாததுடன், அவரின் பக்கவாட்டில் ட்ரம்ப் நின்றது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இருவரும் மாறுபட்ட கருத்துகளையே கூறினர்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே, அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதுடன், அமெரிக்க மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சௌதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட குழுவை அமைக்க முடிவு செய்தனர்.
நேட்டோவில் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரோமானியா, ஸ்பெயின், ஸ்வீடன், துருக்கி உட்பட பல நாடுகள் உள்ளன. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின்போது நேட்டோவில் இருக்கும் எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் அழைப்பு விடுக்காதது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
போரில் சம்பந்தப்பட்ட உக்ரேனைக்கூட அழைக்கவில்லை என்பதுதான் பெருந்துயரம். இதுவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான அதிருப்திக்கு வித்திட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.