யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யுக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் ரத்தானது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில், ‘மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார்” என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் தங்களுக்கு நன்றியுடன் இருக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி, யுக்ரைன் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் எந்த ‘சமரசமும்” இருக்க கூடாது என யுக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த யுக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியுடனான மோதல் இரு தரப்புக்கும் ‘நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க மற்றும் யுக்ரைன் ஜனாதிபதிகளுடன் பிரித்தானிய பிரதமர் தொலைபேசியில் உரையாடியதாக அவரது பேச்சாளர் தெரிவித்தார். யுக்ரைனுடன் அசைக்க முடியாத ஆதரவை அவர் வெளிப்படுத்தியதாகவும் பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.