விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை கடவுச்சீட்டானது குறித்த தரவரிசையில் கடந்த ஆண்டு 96 ஆவது இடத்தில் இருந்தது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தரவரிசையில் ஐந்து இடங்களுக்கு இலங்கையின் கடவுச்சீட்டு முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
மொத்தம் 99 தரவரிசைகளைக் கொண்ட பட்டியலில் ஈரான் மற்றும் சூடானுடன் இலங்கை 91 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 193 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா கூட்டாக இரண்டாவது இடத்தையும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை மூன்றாவது இடத்தையும் பகிர்ந்து கொள்கின்றன.
தரவரிசையில் இறுதி இடத்தில் ஆப்கானிஸ்தானின் கடவுச்சீட்டு உள்ளது.
அதன் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 25 நாடுகளுக்கு மாத்திரம் பயணிக்கலாம்.
உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸால் தொகுக்கப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம் என்பதன் அடிப்படையில் கடவுச்சீட்டுகளை தரவரிசைப்படுத்துகிறது.