மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று 6 இடம் பெற்றது.
இதன் போது அதிகாரிகளினால் திட்ட முகாமைத்துவ குழுக் கூட்டத்தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டு அங்கிகரிக்கப்பட்டன.
இப் பிரதேசத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நேர அட்டவணை, மானிய உரம் வழங்கள், காப்புறுதி, அறுவடைபோன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன் போது கருத்த தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், விவசாயிகள் பாவனையில் உள்ள வங்கி கணக்கு இலக்கங்களை வழங்குவதனால் துரிதமாக மானிய கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
அத்துடன் விதைப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முடிவடையும் எனவும், அறுவடை ஜுலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி முடிவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் கே. பிரதீபன், நீர்பாசன பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.