வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரான உயிரிழந்தவரின் மனைவி பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார். பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டது.
இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிஸிற்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்பின் பிற்பகல் 2 மணியளவில வவுனியா பொலிஸாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது.நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிஸார் வரவில்லை.
அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது. அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிஸார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிஸார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தினர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி டா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார். பொலிஸார் தாமதமாக வந்தமையால் மாலை 5 மணிக்கே சடலம் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்று பரிசோதனைகக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.