அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் அனைத்திற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்த வரிகள் புதன்கிழமை (12) முதல் அமலுக்கு வந்தன.
இது அமெரிக்காவிற்கு ஆதரவாக உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைக்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதுடன் ஐரோப்பாவிலிருந்து விரைவான பதிலடியைப் பெற்றது.
அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்களுக்கான பாதுகாப்புகளை மொத்தமாக அதிகரிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை, உலோகங்களின் அனைத்து இறக்குமதிகளுக்கும் 25% உலகளாவிய வரிகளை மீண்டும் விதிக்கிறது.
மேலும், உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் நூற்றுக்கணக்கான கீழ்நிலை பொருட்களுக்கு வரிகளை விரிவுபடுத்துகிறது.
ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் முதலீட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலகப் பொருளாதாரத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை முழுமையான வரிகளை விமர்சித்தன.
அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வெளிநாட்டு நாடான கனடா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா ஆகியவை வரிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாகும்.
அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியம் ஏற்றுமதி செய்வதற்கான வரியை 50% ஆக இரட்டிப்பாக்குவதாக ட்ரம்ப் ஆரம்பத்தில் கனடாவை அச்சுறுத்தினார்.
ஆனால், மினசோட்டா, மிச்சிகன் மற்றும் நியூயோர்க் மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதிக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை ஒன்ராறியோ மாகாணம் நிறுத்தி வைத்த பின்னர் பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கது.