கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சதியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகீர் மாக்கரின் இராஜினாமா தொடர்பாக உரிய தீர்வு முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது இம்தியாஸ் பாகீர் மாக்கார் பதவி விலகியமைக்கான காரணம் என்ன என்பது தனக்கு தெரியாது எனவும்,
எவ்வாறிருப்பினும் இது கட்சிக்கு பாரிய இழப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்தியாஸ் பாகீர் மாக்கார் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவராவார் எனவும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளார் எனவும், அவரது இராஜினாமா கடிதத்தை கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் நிர்வாகக் குழு கூடவுள்ளதாகத் தெரிவித்த அவர்,இதன் போது குறித்த விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும் எனவும், எவ்வாறிருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் கட்சியிலிருந்து எவரையும் இழக்கவோ நீக்கவோ தாம் எதிர்பார்க்கவில்லை எனவும், கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது கட்சியினரை மாத்திரமின்றி எமது கொள்கைகளுடன் இணங்குபவர்களுடனும் இணைந்து பயணிப்பதற்கும் தாம் தயாராகவே உள்ளதாகவும், இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விடயங்கள் காணப்படுகின்றன எனவும், அவற்றை சரி செய்து சஜித் பிரேமதாசவுடன் முன்னோக்கிப் பயணிப்பதே எமது இலக்காகும் எனவும் இம்தியாஸின் பதவி விலகின் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.