நேற்று முன்தினம் யாழ். நெடுந்தீவில் கைதான இராமேஸ்வரம் மீனவர்கள் மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவையென பலமுறை தம்மால் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி அதிகரித்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிறைபிடிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தமிழக மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும் இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.