தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மனோகணேசனுடன், தமுகூ அரசியல் குழு உறுப்பினர், ஜமமு சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் அமெரிக்க தரப்பில் அரசியல் அதிகாரி செச் லோன்ஸ், அரசியல் நிபுணர் குரூஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது போது ”இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் அமெரிக்கா பயணமாக உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை” என அமெரிக்க தூதுவர் தன்னிடம் தெரிவித்தாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது ” இன்று அமெரிக்காவுக்கு இலங்கை 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 23 விகிதம் ஆகும். அத்துடன் இலங்கை பொருட்களை அதிகமாக வாங்கும் நாடாக அமெரிக்காவே இருக்கிறது.
எவ்வாறு இருப்பினும் இலங்கை அமெரிக்காவில் இருந்து ஆக 370 மில்லியன் டொலர் பெருமதியான பொருட்களையே வாங்குகிறது. இலங்கைக்கு சார்பாக இருக்கும் இந்த வர்த்தகம் தொடர்பில், அமெரிக்காவில் இருந்து அதிகமான பொருட்களை இலங்கை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.
குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஆடை ஏற்றுமதி பொருட்களுக்கான பருத்தி ஆடை மூல பொருளை இலங்கை அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்கள் தொடர்பில் காணி உரிமை, வீட்டு உரிமை ஆகிய விவாகாரங்கள் தொடர்பில் NPP அரசாங்கம் தெளிவான பார்வையை கொண்டிருக்கவில்லை. எனினும் இது தொடர்பில் அவசியமான நெருக்குதல்களை தந்து, நாம் கட்சியாக 2015ம் வருடம் முதல் ஆரம்பித்த காணி, வீடு உரிமை பயணத்தை தொடர அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என நான் அமெரிக்க தூதுவரிடம் கூறினேன்.
தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இராணுவம் மீள்-அழைப்பு, காணாமல் போனோர் அலுவலகம், உண்மை ஆணைக்குழு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை வழங்காமல், முதலில் பொருளாதார சீரமைப்பு என்ற விவகாரத்துக்கே முன்னுரிமை வழங்குகிறது.
ஆனால், நாம் பொருளாதார சீரமைப்பு, தேசிய விவாகரம் ஆகிய இரண்டையும் சமாந்திரமாக முன்னேடுக்கும் படி அரசை கோருகிறோம் என நான் அமெரிக்க தூதுவரிடம் கூறினேன்.
மேலும்,வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா வருவாய்இ ஏற்றுமதி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை தெரிவித்து கொண்டோம்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.