இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்தன, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல்,பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் உற்பத்தி, அதன் ஏற்றுமதி, போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு திட்டம், பயனாளிகள் தெரிவு முறை மற்றும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை தொடர்பாகவும், அரசு வரிய மாணவர்களுக்கான சத்துணவு வழங்குவது தொடர்பாகவும், மலையக மக்களுக்கான உதவிகள் அவர்களுக்கான சேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியையும் திருப்தியும் தருவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.