உலக சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், சீனா தனது 34% எதிர் வரியை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் ட்ரம்ப், சீன இறக்குமதிகள் மீது 34% வரி விதிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, பீஜிங் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது.
அதன்படி, இது அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் குறைந்தபட்சம் 10% வரியை நிர்ணயித்தது.
திங்களன்று (07) ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் சீனாவிற்கு அதன் எதிர் நடவடிக்கையை கைவிட அல்லது 50% வரியை எதிர்கொள்ள செவ்வாய்க்கிழமை (08) வரை அவகாசம் அளித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வொஷிங்டனை “பொருளாதார கொடுமைப்படுத்துதல்” என்று குற்றம் சாட்டியது.
மேலும், பீஜிங் “அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும்” என்றும் கூறியது.
ட்ரம்ப் தனது அச்சுறுத்தலின் பேரில் செயல்பட்டால், அமெரிக்க நிறுவனங்கள் சீன இறக்குமதிகள் மீது மொத்தம் 104% வரியை எதிர்கொள்ள நேரிடும் – இது மார்ச் மாதத்தில் ஏற்கனவே அமுலில் இருந்த 20% வரிகளுக்கும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 34% வரிகளுக்கும் கூடுதலாக வருகிறது.
இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கும் உலகளாவிய போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு வர்த்தகப் போரை ஆழப்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே, சமூக ஊடகத் தளமான ட்ரூத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “சீனாவுடன் அவர்கள் கோரிய சந்திப்புகள் [கட்டணங்கள் குறித்து] அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும்!” என்றும் எச்சரித்தார்.
மேலும் திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உலகளாவிய இறக்குமதி வரிகளை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று கூறினார்.
அத்துடன், கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் எந்தவொரு நாடும், உடனடியாக புதிய மற்றும் கணிசமாக உயர்ந்த வரிகளை எதிர்கொள்ளும் என்ற எனது எச்சரிக்கையை மீறி, சீனா தனது எதிர் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு ஒரு அறிக்கையில்,
சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ சரியான வழி அல்ல.
“‘பரஸ்பரம்’ என்ற பெயரில் அமெரிக்காவின் மேலாதிக்க நடவடிக்கை, மற்ற நாடுகளின் நியாயமான நலன்களைப் பலி கொடுத்து அதன் சுயநல நலன்களுக்கு சேவை செய்கிறது மற்றும் சர்வதேச விதிகளை விட ‘அமெரிக்காவை முதன்மைப்படுத்துகிறது – என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், புதிய வரிகளானது சீனாவின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அடியாக இருக்கும், ஏனெனில் அமெரிக்கா அவர்களுக்கு ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாகும்.
அமெரிக்காவிற்கு சீனாவின் அதிக ஏற்றுமதிகளில் மின்சார பொருட்கள் மற்றும் பிற இயந்திரங்கள், கணினிகள், தளபாடங்கள், பொம்மைகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும்.
அமெரிக்கா சீனாவிற்கு அதிக ஏற்றுமதி செய்வது எண்ணெய் வித்துக்கள் மற்றும் தானியங்கள், விமானங்கள், இயந்திரங்கள் மற்றும் மருந்துகள்.
இதனிடையே, கட்டணங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஒரு கொந்தளிப்பான நாளுக்கு வழிவகுத்தது.
ட்ரம்ப் உலகளாவிய கட்டணங்களை அறிவித்ததிலிருந்து உலகளவில் சந்தைகள் சரிந்துள்ளன.
திங்கட்கிழமை திறந்தவுடன் அமெரிக்க பங்குச் சந்தைகளின் மதிப்பு மீண்டும் கடுமையாக சரிந்தது, அதே நேரத்தில் லண்டனின் FTSE 100 உட்பட ஐரோப்பாவின் மிகப்பெரிய சந்தைகள் 4% க்கும் அதிகமாக சரிந்தன.
ஆசிய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை சரிந்தன.
ஹாங்கொங்கின் ஹேங் செங் குறியீடு 13% க்கும் அதிகமாக சரிந்தது, இது 1997 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய ஒரு நாள் சரிவு.
எனினும் பெரும்பாலானவை செவ்வாயன்று ஒரு சிறிய திருத்தத்தைக் காட்டின, பெரும்பாலான பங்குச் சந்தைகள் உயர்ந்தன.