மொஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 30 மணி நேர “ஈஸ்டர் போர் நிறுத்தம்” முடிவடைந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஒரே இரவில் பல பகுதிகளில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரேனின் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால், உக்ரேனின் விமானப்படை கிய்வ் பிராந்தியத்திற்கும், கெர்சன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி, மைகோலைவ் மற்றும் சபோரிஜியாவிற்கும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டது.
எனினும், இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்ய இராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்த போர் நிறுத்தம் மொஸ்கோ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (21:00 GMT) காலாவதியானது.
இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.
இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை (20) இரவு “ரஷ்யாவும் உக்ரேனும் இந்த வாரம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்” என்று நம்புவதாக கூறினார்.
ரஷ்யா 2022 பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
தற்போது 2014 இல் மொஸ்கோவால் இணைக்கப்பட்ட தெற்கு கிரிமியா தீபகற்பம் உட்பட உக்ரேனின் சுமார் 20% நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகிறது.
2022 முதல் அனைத்து தரப்பிலும் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.