2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (20) நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, ஒன்பது விக்கெட்டுகளினால் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வீழ்த்தியது.
CSK வின் பந்து வீச்சாளர்களினால் மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரியான் ரிக்கெல்டனின் விக்கெட்டை மாத்திரம் வீழ்த்த முடிந்தது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது போட்டியானது நேற்றிரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா – ஷேக் ரஷீத் களமிறங்கினர்.
இதில் ரச்சின் ரவீந்திரா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்து வந்த அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
அவர் வெறும் 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்திலேயே ஷேக் ரசீத் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அந்த சமயத்தில் சென்னை அணி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜடேஜா – ஷிவம் துபே சிறப்பாக இணைப்பாட்டத்தை அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர்.
முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியில் களமிறங்கியது.
79 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்த நிலையில் ஷிவம் துபே 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தோனி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இருப்பினும் ஜடேஜா இறுதி வரை களத்தில் இருந்து சென்னை அணி சவாலான இலக்கை எட்ட உதவினார்.
அதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.
ஜடேஜா 53 ஓட்டங்களுடனும், ஓவர்டான் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 177 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.
அணியின் தொடக்க வீரர்களாக ரயான் ரிக்கெல்டன் – ரோகித் சர்மா களமிறங்கினர்.
நிதானமாக ஆடிய ரயான் ரிக்கெல்டன், 19 பந்துகளில் 24 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சூர்யகுமார் யாதவுடன், ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.
அஸ்வின் வீசிய 12-வது ஓவரில் ரோகித் சர்மா(33 பந்துகள், 50 ஓட்டம்), இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், 15 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார்.
இறுதியில் மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 177 ஓட்டங்களை குவித்தது.
இதன் மூலம் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா (76 ஓட்டம், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்), மற்றும் சூர்யகுமார் யாதவ் (68 ஓட்டம், 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதேவேளை, சண்டிகரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (20) மாலை நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றது.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 18.5 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.
பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 54 பந்துகளில் 73 ஓட்டங்களையும், தேவ்தூத் படிக்கல் 35 பந்துகளில் 61 அதிகபடியாக பெற்றனர்.