ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையமைப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.’
குறித்த திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, 5 கோடி இந்திய ரூபாய் நஷ்டஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்த சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் 7 கோடி சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரின் பாடல் ஹிட் ஆகவில்லை எனவும் எங்களது பாடல்களை படத்தில் வைத்ததால் தான் படங்கள் வெற்றி பெருகின்றன எனவும் இயக்குனரும் , இசையமைப்பாளர் இளைய ராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விட்பா முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது 7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் ஒருவரை இயக்குனர் வைத்துள்ளபோதும் அவர் இசையமைத்த பாடலுக்கு கைத்தட்டல் விழாமல் எங்கள் பாடலுக்கு கைதட்டல் விழுகின்றது. எங்கள் பாடலை போட்டு நீங்கள் ஆடினால் என்ன அர்த்தம். இந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உண்டு இல்லையா? அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் இல்லையா?. அனுமதி கேட்டிருந்தால் எனது அண்ணன் இளைய ராஜா இலவசமாக கொடுத்திருப்பார். கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. பணத்தாசையால் நாங்கள் இதை செய்யவில்லை.” இவ்வாறு கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கங்கை அமரன் தெரிவித்த கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.