இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு ‘உள்ளக அலுவல்கள் அலகு’ எனும் பிரிவானது நேற்று யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலாளர் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரிவானது ஊழல் செயற்பாடுகளை தடுக்கவும், அலுவலக செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறுவதற்கும், மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை பொது மக்கள் அறிந்து கொள்வதற்கும் வழிவகை செய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கு பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் சிறப்பாகச் செயற்பட வேண்டும் எனவும், அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கு மேலதிகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.