• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!

வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 10

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/05
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, சிறப்புக் கட்டுரைகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 10 ( 06.01. 2025)

‘வேர்களைத்தேடி…‘பண்பாட்டுப் பயணத்தின் ஒன்பதாவது நாள் .. காலைவேளை… நாம் தஞ்சாவூரின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தரிசிக்கவுள்ளதாக இணைப்பாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர் தொடர்பான இணையவழித்
தேடலை ஆரம்பித்திருந்தேன். இப்போது எனது உடல் நிலை தேறியிருந்தது.

அதனால் மனம் உற்சாகத்தில் திளைத்திருந்தது. தஞ்சாவூர் வளமான பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்துக்காகக் கொண்டாடப்படும் ஒரு நகரமாகும். தஞ்சாவூர் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது மாமன்னன் இராஜ ராஜ சோழனால் கட்டப்பெற்ற தஞ்சைப் பெருங்கோயில்தான். இதனை எனது பதின்ம வயதில் தரிசித்த அனுபவம் உள்ளபோதிலும் அன்றைய அந்த தரிசனத்திலிருந்ததைவிட இன்று எனது எதிர்பார்ப்பு அதிகமதிகமாக இருந்தது.

அதற்குக் காரணம் கடந்த வருடத்தில் பார்த்து ரசித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்படுத்தியிருந்த மன அதிர்வுகள்தான். அத்திரைப்படத்தைப் பார்த்த பின்னர் தஞ்சையை ஆண்ட சோழமன்னர்கள் பற்றிய ஒரு உயரிய
பிம்பம் என் மனதில் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

நாளின் தொடக்கத்தில் ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றான புகழ்பெற்ற
சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் தஞ்சைக் கலைக்கூடத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

 

சரஸ்வதி மஹால் நூலகம்


இது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நூலகம் நாயக்கர் மற்றும்
மராத்திய மன்னர்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம் தமிழ்,
சமஸ்கிருதம் , மற்றும் பிறமொழிகளில் உள்ள அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும்
நூல்களைக் கொண்டுள்ளது. இவை பல நூற்றாண்டுகளாக இங்கு பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.

கி.பி 1531 – 1675 வரை தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசாங்க நூலகமாக இது
ஆரம்பிக்கப்பட்டது. கி.பி 1675ஆம் ஆண்டு தஞ்சையைக் கைப்பற்றிய மராத்திய மன்னர்களும்
இந்நூலகத்தை பேணிப் போற்றி வளர்த்தனர்.

மராத்திய சரபோஜி மன்னரின் (கி.பி1798 – 1832) நினைவாக சரபோஜி சரஸ்வதி மஹால் எனப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

(படம் – சரபோஜி மன்னரின் உருவச்சிலை )

கி.மு 3ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டுவரை காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் எவ்வாறு மாறுபாடடைந்தது என்பதைக்காட்டும் அட்டவணை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

(படம் – தமிழ் எழுத்துக்களின் வரிவடிவ மாற்றத்தைக் காட்டும் அட்டவணை)

இவ்வெழுத்துக்கள் கிரந்த எழுத்துக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இக்கிரந்த எழுத்துக்கள் யாவும் ஓலைச்சுவடிகளிலேயே உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் பின்பு தமிழ் எழுத்துக்களின் இவ்வரிவடிவம் பெரிய அளவில் மாறுபாடடையவில்லை.

இந்நூலகத்தில் பனையோலையினான ஓலைச்சுவடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாடநூல்களில் மாத்திரம் கற்றறிந்த ஏடு, எழுத்தாணி என்பவற்றை எம் கண்களால் காணக்கிடைத்தமை மகிழ்ச்சியை வழங்கிய ஒரு அனுபவம். எனினும் இவற்றை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எமக்கு வழங்கப்படவில்லை.

 

 

 

செப்பினால் பக்கங்கள் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் நூல் ஒன்று இங்கு
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது எமக்கு வியப்பினை ஏற்படுத்தியது. சீனர்களால் வழங்கப்படும்
கொடூர தண்டனைகள் அடங்கிய படங்களாலான , 28 பக்கங்கள் கொண்ட நூலொன்றும் இங்கு
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நூலகத்தின் கூரை மற்றும் சுவர்கள் ஓவியங்களால் நிறைந்திருந்தன.இவ் ஓவியங்களில்
இயற்கையான தாவரச் சாற்றிலிருந்து பெறப்பட்ட வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டது.

( படம் – இயற்கை வர்ண ஓவியங்கள் )

மிகப்பெரிதான ஓலைச்சுவடியொன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சாதாரண
ஓலைச்சுவடியைவிட ஆறுமடங்கு பெரிதாக இது உள்ளதென்ற தகவல் கிடைத்தது. காண்பதற்கு
அருமையான இப் பொக்கிஷங்களை காணும் இவ் அரிய வாய்ப்பு “வேர்களைத்தேடி” நிகழ்வில்
கலந்துகொண்டதன் மூலம் எமக்குக் கிடைத்தது உண்மையில் ஒரு பேறாகவே எனக்குத்
தோன்றியது.

இந்நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நடராஜர் அரங்கத்தில் கற்றூண்களில்
அமைக்கப்பட்ட விக்கிரகங்கள் சிவன் , பிள்ளையார் , முருகன் , பிரம்மா, ( நான்கு முகத்துடன்)
காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.இவை 11ஆம் , 12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை
என்ற தகவலையும் பெற்றுக்கொண்டோம்.

 

சரஸ்வதி மஹால் நூலகத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அதன் முன் நின்று அனைவரும்
புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பின்னர் அதன் அருகிலிருந்த தஞ்சைக் கலைக்கூடத்தை நாம்
பார்வையிடச்சென்றோம்.

தஞ்சைக் கலைக்கூடம்

தஞ்சாவூர் கலைக்கூடம் என்பது தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு
அருங்காட்சியகம் ஆகும்.

இது1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உலகத்தில் எங்கும் காணக்கிடைக்காத சில
தெய்வங்களின் செப்புத் திருமேனிகள் இக் கலைக்கூடத்தில் உள்ளன. இக்கலைக்கூடத்தில் 7ஆம்
நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும்
மேற்பட்ட சிலைகள் உள்ளன.


இக்கலைக்கூடத்திலுள்ள செப்புச் சிலைகளும் கற்சிலைகளும் பெரும்பாலும் தஞ்சையை ஆண்ட
புகழ்மிக்க சோழமன்னர்கள் காலத்தவை.சில பிந்திய தெலுங்கு நாயக்க மன்னர்கள்
காலத்தவை.எஞ்சியவை மராட்டியமன்னர் காலத்தவை.

இக் கலைக்கூட்தைப் பார்வையிட்டு முடிந்ததும் மதிய உணவு உண்பதற்கு  உணவகமொன்றுக்கு அழைத்துச்
செல்லப்பட்டோம்.

மதிய போசனம் உட்கொண்டு முடிந்ததும் ஐம்பொன்னினால் சிலைகள்
உருவாக்கப்படும் இடமொன்றைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டோம்.

அங்கு குடிசைக் கைத்தொழிலாக சிலைகள் உருவாக்கப்படும் முறையினைக் காணக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. சிலைகள் செய்யும் படிமுறை நுணுக்கங்களை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது எமக்குக் கிடைத்த புதியதொரு அனுபவமாகும்.

இச் செயற்பாட்டினை பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் பார்வையிட்டதோடு தமது
கைத்தொலைபேசிகளில் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

நிறைவில் நாம் ஆவலுடன் காத்திருந்த தஞ்சைப் பெருவுடையார் பெருங்கோயிலை தரிசிக்கும்
பேறு மாலைவேளையில் எமக்குக் கிட்டியது.

தஞ்சைப்பெருவுடையார் கோயில் (தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்)

தஞ்சாவூரிலுள்ள காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வாலயம் உலகப் பாரம்பரிய
சின்னமாக 1987 இல் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அமைந்துள்ளமிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

சோழமன்னன் இராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட இவ்வாலயம் தமிழர் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது. கோயிலின் விமானம் 216 அடிகள் உயரம் கொண்டது. அற்புதமான சிற்பங்கள் காண்போரிடையே
பிரமிப்பை ஏற்படுத்த வல்லவை. தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இது
விளங்குகிறது.

கருவறையிலே உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். இது 6அடி உயரம்
மற்றும் 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையாருடன் 23.5 அடி உயரமுடைய இலிங்கமாகும்.

சோழமன்னரின் பின்பு ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களாலும் இவ்வாலயம் பராமரிக்கப்பட்டு
வந்துள்ளது. ஆலயத்தில் காணப்படும் பிரமாண்டமான நந்தி நாயக்க மன்னனர்களால் அமைக்கப்பட்டதாகும் .
இங்குள்ள சுவரோவியங்கள் சோழர்களின் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றன. தெய்வீக மற்றும் புராணக் கதைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.


மேற்குறித்த தகவல்களைத் தெரிந்து கொண்டவர்களாக ஆலயத்தை நோக்கி நாம் பயணித்தோம்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தை நாம் சென்றடைந்தவேளை எம் அனைவரதும் உள்ளங்கள்மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தன. ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களையும் இணையவழியில் நாம் தேடியிருந்ததால் அதன் பிரமிப்பூட்டும் அம்சங்களைக் காணும்
அவாவுடனே சென்றிருந்தோம் .

ஆலயத்தின் முன்பகுதி சனக்கூட்டத்தால் நிரம்பியிருந்தது. வாகனத்தை விட்டிறங்கி, பிரதான
வீதியைக் குறுக்கறுத்து மராத்தா நுழைவாயில் ஊடாக நாம் நுழையும்போது அந்த நுழைவாயில் சோழமன்னர்களின் பின் ஆட்சிக்கு வந்த மராத்திய மன்னர்களால் அமைக்கப்பட்டது என்ற தகவலை நாம் அறிந்து கொண்டோம்.

மராத்தா நுழைவாயிலைக் கடந்து உட்சென்றபோது ஆலய வளாகத்தின் வெளிப்புறமாக அகழியொன்று தென்பட்டது.  பண்டைய மன்னர் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புக்கருதி அரண்மனைகளைச்சுற்றி அகழிகள் அமைக்கப்பட்டிருந்ததாக வரலாற்றுப் பாடத்தில் கற்ற விடயங்கள் நினைவுக்குவர எனது கால்கள் என்னையறியாமலே அவ்விடத்தில் சில நிமிட
நேரம் தரித்து நின்றன. என்னோடு மேலும் சில பங்கேற்பாளர்கள் அவ்விடத்தில் தரித்து நின்று
அகழியினைப் பார்வையிட்டனர்.

அடுத்து தென்பட்ட கோபுரவாயில் கேரளாந்தகன் திருவாசல் என்று அறிவுறுத்தப்பட்டது. சேரமன்னர்களை போரில் தோற்கடித்து, தாம் பெற்ற வெற்றியினை நினைவுகூரும் வகையில் அதனை மாமன்னன் இராஜராஜன் அமைத்ததாக தகவல்கள் கிடைத்தன.

 

கேரளாந்தகன் திருவாசல் கோபுரத்தில் காணப்பட்ட சிற்பங்கள் எம்மை வியப்பில் ஆழ்த்தின.
பங்கேற்பாளர்களில் சிலர் அவ்விடத்தில் நின்று தமது கைப்பேசிகளில் புகைப்படம்
எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து முன்நோக்கி நகர்ந்தபோது இராஜராஜன் திருவாசல் கண்டு மலைத்து
நின்றேன். கேரளாந்தகன் திருவாசலை விட இது அகலத்தில் சற்று பெரியதாக
அமைந்திருந்தது.கோபுரத்தில் வடிக்கப்பட்டிருந்த கருங்கற் சிற்பங்கள் கலைப்பொக்கிஷங்களாக
பிரமிப்பை ஏற்படுத்தின.

இராஜ ராஜன் திருவாசலிலிருந்து ஆலயத்தை நோக்கியபோது எதிரே காணப்பட்ட நந்தி
மண்டபத்தில் பிரமாண்டமாகத் தோற்றமளித்த கருங்கல்லினாலான நந்தி எம்மை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நந்தியாகும். இதன் உயரம் 14 மீற்றர்.

நீளம் 7 மீற்றர் , அகலம் 3 மீற்றர் ஆகும். இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது வியக்கத்தக்க
ஆச்சரியமாகும். ( பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான செவ்வப்ப நாயக்கரால்
ஆலயத்துள் உள்ள சிவலிங்கத்துக்கு இணையாக இந்த நந்தி அமைக்கப்பட்டதென்ற
தகவலையும் நாம் தெரிந்து கொண்டோம்.)

***(நந்தி மண்டபத்திற்குத் தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி
உள்ள நந்தியே இராஜராஜ சோழனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும்.)
நந்தியின் பின்புறமாக விமானம் காட்சியளித்தது. தமிழகத்திலுள்ள ஆலயங்களில் விமானம்
மிகவும் உயர்ந்ததாக உள்ள ஆலயம் இதுவாகும்.

இவ்விமானம் எகிப்திய பிரமிட்டுக்களைப்போல கூர் நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிருகத்திலிருந்து 190 அடி
உயரத்திற்கு ஓங்கியுள்ளது.

விமானம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல் ”கிரானைட்”ஆகும்.
கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கலசம் 80 தொன் எடையுள்ள ஒரே கல்லால்
செய்யப்பட்டுள்ளது.

 

மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்கிறது. இது 35
உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே
கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப்பெற்றிருக்கின்றன.

இவைதவிர இந்த ஆலயவளாகத்திலுள்ள கருவூர்த் தேவர் கோயில் , அம்மன் கோயில் ,
சுப்பிரமணியர் கோயில் ஆகியன பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாலயத்தின் பெருமைகளை பலவாறாக அறிந்தும் , நேரிலே பார்த்துத் தெரிந்தும் கொண்ட
எமது மனநிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. பரவசத்தின் உச்சத்திற்கு அது
எங்களை இட்டுச் சென்றிருந்தது.

தஞ்சைப் பெரிய கோயில் இந்தியாவின் பண்டைய நாகரீகத்தையும் சோழர்களின் கலை, கலாசார பாரம்பரியத்தையும் உலகிற்கு உணர்த்தி நிற்கிறது. இது பார்வையாளர்களுக்கும் , பக்தர்களுக்கும் பொற்கால வரலாற்றையும்
ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது. அதன் கட்டிடக்கலை உலகளாவிய ரீதியில் புகழ்
பெற்றுள்ளது என்ற உண்மையை இந்தக் கணத்தில் உரத்துக்கூற விரும்புகிறேன். ***
வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு தடவையேனும் இவ்வாலயத்திற்குச் சென்று
தரிசித்து வருவது வாழ்வின் பெரும் பேறாகும். எனது அடுத்த பதிவில் தமிழ் நாட்டின் கட்டிடக்கலைச் சிறப்பின் அடையாளமாக விளங்கும் கும்பகோணம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலுக்குச் சென்று வந்த அனுபவங்களைப்
பகிர்ந்துகொள்ள உள்ளேன். அதுவரை காத்திருப்போமா ?

Related

Tags: Brihadeshwara TempleIango BharathyIlango BharathyINDIAKing Raja Raja CholanMK StalinTamil naduTanjore Big TempleThanjavurTN GovtV.Tamils NRT Reaching Your Rootsஇளங்கோ பாரதிவேர்களைத் தேடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

Related Posts

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!
இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

2025-05-05
கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!
இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

2025-05-05
பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

2025-05-05
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2025-05-05
பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை

பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்!

2025-05-05
வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு!
இலங்கை

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு!

2025-05-05
Next Post
கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

2025-04-07
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

0
நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

0
கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

0
பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

0
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

2025-05-05
நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

2025-05-05
கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

2025-05-05

வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!

2025-05-05
பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

2025-05-05

Recent News

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி!

2025-05-05
நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

2025-05-05
கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

2025-05-05

வேர்களைத்தேடி விழுதுகளின் பயணம்!

2025-05-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.