இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவும்ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், திடீர் பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், ‘பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் விதம் குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர் உடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டார்.
இதேவேளை ,ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி நேற்றிரவு டில்லிக்கு வருகை தந்தார். இதன்போது இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.