கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடியும் இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, ‘முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது அதிர்ந்து போய் விட்டோம். எங்களின் ரத யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இந்த செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது. வெறுப்பு ஒருபோதும் வெல்ல முடியாது,’ எனத் தெரிவித்தனர்.















