தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.















