முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவில் இன்ற காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு விமல் வீரவங்ச அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‘பெலியத்தே சனா’ என்பவர் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்த கருத்து தொடர்பான மேலதிக விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ‘பெலியத்த சனா’ எனப்படும் வீரசிங்ககே சரத், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டு உறுப்பினர் என விமல் வீரவங்ச பகிரங்கமாக ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பாக தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவு நேற்று முன்தினம் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றிருந்தது.
எனினும் இன்று மீண்டும் தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை பொதுவெளியில் வெளியிட்டமை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோது விமல் வீரவன்ச இவ்வாறு அறிவித்திருந்தார்.














