திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தற்போது நிறைவடைந்து விட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி, திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன. எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும். என ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
திருமலை புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு சரியானதுடன் அது மீண்டும் வைக்கப்பட்டது.
அந்த காணியில் அமைந்த உணவகம் சட்டவிரோதம் என்று கூறி நீதிமன்ற வழக்கு உள்ளது. சமய ஸ்தலம் என்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
இதனை இனவாதமாக்க இடமளிக்கமட்டேன். இந்த நாட்டில் பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். யாரும் இனவாத தீயை மூட்ட விட மாட்டோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமாக செய்வதற்கு எதுவுமில்லை. நேர்மறை எண்ணங்களை நாம் வளரவிடுவதுமில்லை. பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பான முழுமையான அறிக்கை கோரியுள்ளேன்.
நீதிமன்ற வழக்கு உள்ளது. பின்னர் ஏன் ஆடுகின்றீர்கள்? இனவாதிகள் தான் இதை பெரிதாக காட்டுகின்றார்கள். சின்னவயது ஹனுமான் ஓடிஆடி தீயை பரப்பியது போல் தான் இங்கும் நடக்கின்றது. இனவெறியை பொறுத்துக்கொள்ள முடியாது, அந்த விளையாட்டு முடிந்துவிட்டது.
எங்களுடைய நாட்டில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இனவாதம் தூண்டப்பட்டு வந்தது.
கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஊழல், பொருளாதார வீழ்ச்சி போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், எங்களுடைய அரசாங்கம் மீது இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை.
எனவே, இவ்வாறு இனவாத விடயங்களால் எங்களுடைய அரசாங்கத்தை தோற்கடிப்பதே எதிரணியின் நோக்கம். அனுமனைப் போல் இனவாதத்தை வைத்து தீ மூட்ட முயற்சிக்கின்றனர்.
எங்களுடைய அரசாங்கம் ஒருபோதும் இனவாதத்துக்கும் இடமளிக்காது. பழைய இனவாத நாடகங்கள் தற்போது அரங்கேற வழிவிட மாட்டோம். நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் இனவாதம் இருக்காது என ஜனாதிபதி தெரிவித்தார்.














