யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.














